Monday, August 10, 2015

தாம்ரபர்ணீ மகாத்மியம்




ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய அரியநூல் தாம்ரபர்ணீ மஹாத்மியம்.


முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி


சில நூல்கள் கற்றுத்தரும்,சில நூல்கள் ஆன்ம அமைதியைப் பெற்றுத்தரும்..கோதையூரான் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூரான் என்றும் இதழியல் உலகில் அழைக்கப்படும் அ.சங்கர்ராம் சப்தமின்றி ஒரு இமாலய சாதனையைப் புரிந்திருக்கிறார். 

சித்தர்கள் வசிக்கும் சிறந்த மலையாம் பொதிகைமலையில் பூங்குளத்தில் உருப்பெற்று தாம்ரபர்ணீ என்கிற திருப்பெயரோடு நிலமெல்லாம் நடந்து புன்னைக்காவலில் சமுத்திரராஜனோடு கடலோடு கலக்கின்ற புண்ணியநதியின் வாழ்வை தான் பண்ணிய புண்ணியத்தின் காரணமாக தாம்ரபர்ணீ மஹாத்மியம் என்ற அரியநூலாக  எழுதியுள்ளார். 

கோதையூரானுக்குப் புதையலாய் கிடைத்த பொக்கிஷத்தை அவர் பதினைந்தாண்டுகளாய் பாதுகாத்து பாளையங்கோட்டை மெரிட் பதிப்பகத்தின் மூலம் 424 பக்க நூலாய் தந்துள்ளார்.பார்வதி தேவியின் அவதாரம் தொடங்கி மன்னன் விடைபெறுதல் என்ற கட்டுரை வரை 51 கட்டுரைகளாகத் தந்துள்ளார்.


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வடமொழியில் எழுதப்பட்டு ஓலைச் சுவடிகளில் கரையானுக்குத்தப்பி பல உயர்ந்தமனிதர்களைத் தாண்டி இந்த நூல் அ.சங்கர்ராம் மூலமாக நமக்குக் கிடைத்துள்ளது.இந்த நூல் தாம்ரபர்ணீ அன்னை, இந்தப் பூவுலகிற்கு வந்த சம்பவத்தை மிக அழகாக விளக்குகிறது.


பொதிகை மலையிலிருந்து ஆர்ப்பரித்து இறங்கி நிலப்பகுதியில் ஓடும்போது உருவான புண்ணியதலங்களின்,புண்ணிய தீர்த்தங்களின் வரலாறுகளை அ.சங்கர்ராம் சிறுகதைபோல் எளியநடையில் சொல்லிச் செல்கிறார்.

கால் மாற்றி அமர்ந்திருந்து அருள்புரியும் தென்திருபுவனம் மூக்கூடல் தட்சிணாமூர்த்தி,அரிகேசநல்லூர் ஸ்ரீ குபேரன்,அத்தாளநல்லூர் கஜேந்திரவரத பெருமாள்,பிரம்மதேசம் பிச்சாடனர்,சேரன்மகாதேவி அருள்மிகு பக்தவத்சலர்,திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி என்று தாம்ரபர்ணீ புண்ணியநதி பாயும் புனிதப்பரப்பில் எழுந்தருளியுள்ள ஆயிரக்கணக்கான திருக்கோவில்களைப் பற்றிய அற்புதமான நூலாக தாம்ரபர்ணீ மஹாத்மியம் திகழ்கிறது.

அகத்திய கூடத்தில் உள்ள குகையில் உள்ள தடாகங்களின் வர்ணனை வியக்கவைக்கிறது. வானத்தில் இருந்து கொட்டும் தீர்த்தமதலால் வானதீர்த்தம் என்ற பெயர் வந்ததாய் ஆசிரியர் எழுதுகிறார்.தேவியின் 24 மந்திரங்களைப் பட்டியலிடுகிறார். தாம்ரபர்ணீயின் பரிகாரத் தீர்த்தக்கட்டங்களான காசிய தீர்த்தம்,புஷ்பவன தீர்த்தம் போன்றவற்றை அ.சங்கர்ராம் விளக்குகிறார்.

இந்த நூலைப் படித்தபின் திருநெல்வேலி குறித்தும் தாம்ரபர்ணீ குறித்தும் நம் மனம் மிகஉயர்வாக நினைக்கிறது. கைகள் தானாக அன்னையை வழிபடுவதற்கு உயருகின்றன. தாம்ரபர்ணீக் கரையில் பிறந்த ஒவ்வொருவருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய அரியநூல் தாம்ரபர்ணீ மஹாத்மியம்.

                  தொடர்புக்கு: மெரிட் பப்ளிகேஷன்,225|14,திருச்செந்தூர் ரோடு,பாளையங்கோட்டை,திருநெல்வேலி 627 002

No comments:

Post a Comment